வேளச்சேரி ஏரி நிரம்பியதால் சாலையை சூழ்ந்த வெள்ளம் - போக்குவரத்து துண்டிப்பு
கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை வெள்ளம் சூழ்ந்தது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் இன்று (04-12-2023) 0230 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சாலையை சூழ்ந்தது. வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை வெள்ளம் சூழ்ந்தது. சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏரி நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் 4 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இதேபோல் வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.