மிலாது நபி திருநாள் - வேல்முருகன் வாழ்த்து
மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளாகிய மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இசுலாம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள், அறப்போராளியாக, அரசியல்வாதியாக, சீர்த்திருத்தவாதியாக, பெண் விடுதலைக்குப் போராடுபவராக வாழ்ந்தவர். நேர்த்தியான இத்தகைய நிலைகள் அனைத்திலும் மனித நேயம் சிறந்திட வழிகாட்டும் மாமனிதராகவே திகழ்ந்தவர்.
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழ வேண்டும் என்பது அண்ணல் நபிகளின் போதனை. அவரது போதனைப்படி, அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்த நபிகள் பிறந்த இந் நன்னாளில் நாம் உறுதி ஏற்போம்.
தமிழகத்தில் உள்ள இசுலாமியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, உரிமைக்காக என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதோடு, இசுலாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் நான் மிலாடி நபி நல்வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்."என்று குறிப்பிட்டுள்ளார்.