வேங்கைவயல் விவகாரம் : அதிமுக - பாஜக கருத்து தெரிவிக்காதது ஏன்?? திருமா கேள்வி..

 
thiruma

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அதிமுக - பாஜக கருத்து தெரிவிக்காதது ஏன் என திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு சி.பி.சி.ஐடிக்கு  மாற்றப்பட்ட நிலையில்,  விசாரணை நடைபெற்று வருகிறது.  ஆனால் இதுவரை  இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் வேங்கைவயல்  கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. . இந்த முகாமினை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொடங்கி வைத்தார்.

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு

அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக இருந்தது.  அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இருந்த போதிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை.

வேங்கைவயல் விவகாரம் : அதிமுக - பாஜக  கருத்து தெரிவிக்காதது  ஏன்??  திருமா கேள்வி..

பா.ஜ.க., சங்க பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி,மத முரண்களை கூர்மையாக்கி அரசியல் செய்ய தொடங்கியிருக்கின்றன. எனவே வேங்கை வயல் சம்பவத்தினை இந்த கோணத்திலும் விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும் வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து  திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சமூகப் பிரச்சனைகளுடன் அரசியலை முடிச்சு போட தேவையில்லை என்று தெரிவித்தார்..