வேங்கைவயல் விவகாரம் : 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு..
வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்காக 11 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட இருந்த நிலையில், 8 பேர் ரத்த மாதிரி தர மறுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைந்துள்ளது. பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் இந்த மேல்நிலை நீர் தேக்கத்தோட்டியில் மர்மநபர்கள் மனிதக்கழிவை கலந்துள்ளனர். கடந்த டிசம்பர் 26ம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் நடந்த அன்று whatsapp குழுவில் இந்த தகவலை பகிர்ந்த காவலர் உட்பட இருவருக்கு சென்னையில் உள்ள குரல் மாதிரி ஆய்வகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குரல் பரிசோதனை நடைபெற்றது. இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது. புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேரிடம் இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட இருந்தது. நிலையில் காவலர் முரளி ராஜா, முத்துக்காடு கிராமத்தை சேர்ந்த 2 பேர் ஆகிய 3 பேரிடம் மட்டும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. எஞ்சிய 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு தெரிவித்து மருத்துவமனைக்கே வரவில்லை. அவர்கள் 8 பேரும் தங்களது வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும், இந்த வழக்கில் தங்களையே குற்றவாளியாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.