வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!
இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வேளச்சேரி காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் அம்மம் பாளையம் தேரடி தெருவை சேர்ந்த வெங்கடாசலம். கடந்த 1988 ஆம் ஆண்டில் வன பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் வனத்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர். 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் இவரது வீட்டில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், 15.25 கிலோ சந்தன மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்களும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் வெங்கடாசலம் கடந்த 2ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் 35 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்ததுடன் , பல்வேறு பொறுப்புகளை திறம்பட செய்து வந்த வெங்கடாசலம் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.


