கால்நடை மருத்துவ படிப்பு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

 
கால்நடை மருத்துவ படிப்பு  - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர  நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் அமைந்துள்ளன.  இந்த கல்லுாரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட, 'பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்' என்ற கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கென 660 இடங்கள் உள்ளன. இதில், 63 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள, 597 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் வரும்.   

கால்நடை மருத்துவ படிப்பு  - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், பால்வளம், கோழியின உற்பத்தி, உணவு தொழில்நுட்ப படிப்புகளுக்காக உள்ள 140 இடங்களில்,  ஆறு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படுகின்றன.  மீதமுள்ள, 134 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் இருக்கின்றன.  இந்த மாநில ஒதுக்கீட்டின் கீழ் பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., மற்றும் பி.டெக்., ஆகிய  படிப்புகளுக்கு 2023 - 24ம் ஆண்டுக்கான  மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்காக நாளை  காலை 10:00 ணி முதல் 30ம் தேதி மாலை 5:00 மணி வரை  https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்திய வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களை அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும்  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.