தவெக மாநில செயலாளர் மறைவு - விஜய் இரங்கல்..

 
TVK Saravanan

 தமிழக வெற்றிக்கழகத்தின் புதுச்சேரி  மாநிலச் செயலர் சரவணன் (47) மறைவுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில செயலாளராக இருந்தவர் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த இவர் கல்லூரி படிக்கும் காலம் முதலே விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னணி நிர்வாகியாக இருந்து வந்த சரவணன் , புஸ்ஸி ஆனந்தின் நெருங்கிய நண்பரும் ஆவார். பின்னர்  விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கிய பின்னர், அதன் மாநில செயலாளராக சரவணன் நியமிக்கப்பட்டிருந்தார். 

TVK Saravanan

வருகிற 27-ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் முதல் மாநில மாநாட்டு பணிகளில் சரவணன் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார். பல நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில்  நேற்று மாலை மீண்டும் புதுச்சேரி திரும்பிய சரவணனுக்கு ,  மாலை வீட்டில் இருந்த போது மரடைப்பு ஏற்பட்டுள்ளது.  உடனடியாக அவரது  குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில்,  ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  

அதையடுத்து சரவணன் உடல் புதுச்சேரி, சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது நெருங்கிய நண்பரான புஸ்ஸி ஆனந்த், சரவணனின் உடலைப்பார்த்து கதறி அழுதார். 


இந்நிலையில் சரவணன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று  குறிப்பிட்டுள்ளார்.