தொண்டர்கள் படைசூழ கருத்தரங்கிற்கு புறப்பட்டார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று மதியம் அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் விஜயை வரவேற்க அக்கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் விமான நிலையத்திலிருந்து தனது வாகனத்தின் ஏறி தொண்டர்களை பார்த்து கையை அசைத்தவாறு சென்றார். அப்போது விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை வழிநெடுக காத்திருந்த தொண்டர்கள் விஜயை மேளதாளங்களுடன் வரவேற்றனர். 3 மணியளவில் சரவணம்பட்டி பகுதியில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களப்பணிகள் குறித்து தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கோவையில் இன்று 2வது நாளாக நடைபெறும் தமிழக வெற்றிக்கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் புறப்பட்டார். வழி நெடுகிலும் ரசிகர்கள் வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் சென்ற விஜய், தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகம் மூட்டினார்.


