முன்கூட்டியே மாநாட்டை தொடங்க விஜய் திட்டம்..!! வெளியாகும் புதிய தீம் பாடல்..
மதுரை தவெக மாநட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணி ஆற்றி வருகிறது. அந்தவகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி அக்கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற இருக்கிறது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னுமிடத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று பிற்பகல் 4 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரவு முதலே தொண்டர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். காலை 8 மணியளவிலேயே அரங்கம் முழுவதும் மக்கள் தலைகளாக காட்சியளிக்கின்றன.

கொளுத்தும் வெயிலுலும் தவெக தொண்டர்கள் குடைகளை பிடித்தபடியும், தலையில் துணிகளை போர்த்தியபடியும் தவெக தலைவர் விஜய்யை காணவும், அவர் நிகழ்த்தப்போகும் உரையை கேட்கவும் மாநாட்டு திடலில் காத்திருக்கின்றனர். இதனையொட்டி மதுரை தவெக மாநாட்டை முன்கூட்டியே தொடங்கி, விரைவில் முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாட்டை தொடங்க இருந்த நிலையில், ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 3 மணிக்கே மாநாட்டை தொடங்கி இரவு 7 மணிக்குள் முடிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்கிற உட்பொருளின் அடிப்படையில் புதிய மாநாட்டுக்கான தீம் பாடல் ஒன்றும் இன்று வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே தவெக கொடி பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டுக்கான தீம் பாடலையும் இசையமைத்திருக்கிறார்.


