எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பை நிராகரித்த விஜய், சீமான்..
அதிமுக- பாஜக கூட்டணியில் இணைய எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், தவெக மற்றும் நாதக கட்சிகள் அதனை நிராகரித்துள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, கட்சிக் கட்டமைப்பு என தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்தவகையில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நீட்டித்த வண்ணமே உள்ளது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுக கூறி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதே இந்த சலசலப்புக்குக் காரணம். அதேநேரம் ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இதுஒருபுறம் இருக்க திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருக்கிறார். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என்பது விஜய் கட்சிக்கும், சீமான் கட்சிக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியிருந்தார். இது ஒரு வகையில் தவெக மற்றும் நாதகவுக்கு விடுக்கப்பட்ட நேரடி அழைப்பாக பார்க்கப்பட்டது.

ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அழைப்பை அக்கட்சிகள் நிராகரித்துள்ளன. ஏற்கனவே தவெக தலைமை தனது எக்ஸ் தள பதிவில், “மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்! ” என்று தனது பதிலை தெரிவித்து விட்டது.
அதேபோல் இபிஎஸ்-ன் கூட்டணி அழைப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், “ தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போயுள்ளன. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம்பெறாது. நாங்கள் என்றைக்குமே தனித்து தான் போட்டியிடுவோம். தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும்? தமிழகத்தில் தேசியக்கட்சிகள் எதற்காக? நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் சீராக இருப்போம்; திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல; திமுகவை எதிர்க்கும் ஓரே அணி நாங்கள்” என்று கூறியுள்ளார்.


