சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா - விஜய் பங்கேற்பு!
த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில், வரும் 2-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெற இருக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. த.வெ.க.வை விஜய் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது.
இந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கான விஜய்யின் முன்னெடுப்புகள் மிக முக்கியமானவை. ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தன் மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, அவர் அத்தனைத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாகக் களமாடி வருகிறார். நம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில், வரும் 2-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. மக்களுக்காக உழைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று, நம் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


