விஜயகாந்த் மறைவு - படப்பிடிப்பு நாளை ரத்து
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார், அவருக்கு வயது 71. பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (டிச.29) அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.