விஏஓ கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - விஜயகாந்த் வலியுறுத்தல்..

 
விஜயகாந்த்

கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் மணல் கொள்ளை குறித்து காவல் துறையில் புகார் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் என்பவரை, அவரது அலுவலகத்தில் புகுந்து 2 நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலை

இது மக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் பாதுகாப்பாக வாழ தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.