தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் - சுதீஷ்
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார், அவருக்கு வயது 71. பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இன்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்தார் என்றும் அவரது மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். தற்போது மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.