விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் - சட்டப்பேரவை செயலகம் இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
கடந்த 5 ஆம் தேதி முதலமைச்சர் கலந்து கொண்ட விழுப்புரம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த நிலையில் புகழேந்திக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த அவரை அமைச்சர் பொன்முடி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் . அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம், இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே தேதியில் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது . இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.