வினேஷ் போகத் தகுதி நீக்கம் அதிர்ச்சி அளிக்கிறது- பி.டி.உஷா
மத்திய அரசும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக இருக்கிறது என இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் பி.டி உஷா தெரிவித்துள்ளார்.
29 வயதான ஹரியானாவைச்சேர்ந்த வினேஷ் போகத் இளம் வயதிலியே மல்யுத்தம் பயின்றார். தனது 19 வது வயதில் யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார். சீனியர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் என அனைத்து தொடர்களில் பதக்கங்களை வென்று, தனது இல்லத்தையே பதக்கங்களால் அலங்கரித்தார். இரண்டு ஒலிம்பிக்கில் தோல்வி கண்ட வினேஷ் போகத்திற்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் சுற்றே கடும் சவாலாக இருந்தது. தொடக்க சுற்றில் 4 முறை உலக சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பான் வீராங்கனையை சுசாகியை வீழ்த்தி அசத்தினார். காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதக்கத்தை உறுதி செய்த வினேஷ் போகத், ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், சுமார் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி 'திடீர்' தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் பி.டி உஷா, “வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சி தருகிறது. அவரை சந்தித்த போது, இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அவருக்கு துணையாக இருக்கும் என உறுதியளித்து இருக்கிறேன். வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்து கடுமையான கண்டனத்தை பதிவு செய்து கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக இருக்கிறது. வினேஷ் போகத்துக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டிக்குத் தேவையான தகுதியை பெற, வினேஷ் எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பதை நான் அறிவேன். இது தொடர்பாக Wrestling Federation of India என்ற அமைப்பு UWW அமைப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. சர்வதேச மல்யுத்த கமிட்டியிடம் இது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளோம்” என்றார்.


