விருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

 
stalin

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

fire

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 3-10-2023 அன்று ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கங்கர்செவல், க.லட்சுமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கணேசன், த/பெ. பிலாவடியான் (வயது 42) மற்றும் திரு.ராஜா, த/பெ.வர்கீஸ் (வயது 38) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி திரு.கணேசன், த/பெ. பிலாவடியான் 7-10-2023 அன்றும், திரு. ராஜா, த/பெ. வர்கீஸ் இன்றும் (10–10-2023) உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

stalin

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் திருமதி.முத்தம்மாள், க/பெ. மாரிமுத்து என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.