விருதுநகர் எஸ்.பி. மக்களை மிரட்டிய விவகாரம்: ‘வேறு மாதிரி என்றால், மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?’ - இபிஎஸ் கடும் கண்டனம்
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி போராட்டம் நடத்திய மக்களை , எஸ்.பி., மிரட்டியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து வெடி விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உறவினர்கள், ஆலை நிர்வாகம் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடல்களை பெற்றுக்கொள்ளாமல் மருத்துவமனை முன்பாக காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் நடுவே எஸ்பி கண்ணன் போராட்டக்காரர்கலை பார்த்து, “ஒழுங்கா இருக்கணும். ஆளாளுக்கு கோஷம் எழுப்பினால்… வேற மாதிரி ஆயிடும். ஒழுங்கா இருக்கணும்” என்று மிரட்டும் தொனியில் எச்சரித்தார். ஏற்கனவே உறவுகளை இழந்து வேதனையில் இருக்கும் உறவினர்களிடம் எஸ்பி எச்சரிக்கை விடுத்து பேசியது சர்ச்சயை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை அதிகாரியின் இந்த செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுக்கும் எக்ஸ் தள பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?
பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் மு.க.ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


