பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் - சசிகலா, டிடிவி தினகரன் புகழஞ்சலி

 
sasikala

மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், வி.கே.சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். 

வி.கே.சசிகலா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்  அவர்களின் மகனும், தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 88வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிக்கை உலகில் முத்திரைப் பதித்தவர். மேலும், விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனைகள் படைத்தவர். விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர். அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய பணிகளையும், சேவைகளையும் போற்றிடுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


இதேபோல் டிடிவி தினகரன் தனது பதிவில், தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராகவும் கல்வி, தொழில்,விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனையாளராகவும் திகழ்ந்த  பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று. சுதந்திர இந்தியாவில் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும்  அவர் ஆற்றிய சேவைகளை  என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.