ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரின் தோழி வி கே சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்
அதிமுகவின் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 5 ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மா உணவகம், அம்மா மருந்தகம் ஆகியவற்றை மூடுவதற்கு திட்டமிடும் திமுகவின் கொட்டம் ஒடுக்கப்படும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளும் ,தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி, கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.அதிமுக கொடி பொருந்திய காரில் மெரினா கடற்கரை வந்த சசிகலா தொண்டர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்திய பின் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும் அவர் உறுதிமொழி ஏற்றார்.