வெதர்மேன் பிரதீப் ஜான் வார்னிங்..! நவம்பர் 18ஆம் தேதி சம்பவம் இருக்கு!
தமிழகத்தை பொறுத்தவரை கிழக்கத்திய சலனம் மிகவும் வலுவற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அல்லது நாளை மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்து விட்டு, அப்படியே குறைய தொடங்கிவிடும். மீண்டும் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதுவரை காத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது வட தமிழகத்தில் மையம் கொண்டிருந்தாலும் பரவலாக மழை கிடைக்க வாய்ப்பிருப்பது தெரிகிறது. இன்றைய தினம் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் பெரிய சம்பவம் காத்திருக்கிறது.
தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதுதவிர திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கும். அதன்பிறகு வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


