திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது - முதல்வர் ஸ்டாலின்!

 
1 1

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டு பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்று, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அப்போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில், ”திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!

கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், காவலா்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோா் காவல் நிலையத்தில் மரணமடைய நேரிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

காவல் நிலைய மரணங்கள் போன்றவற்றில் யாா் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும். இதை சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியுமிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.