"தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தியேட்டரில் அனுமதி" - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தியேட்டரில் அனுமதி என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில்கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் வாரத்திற்கு இருமுறை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் பரவி வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக தியேட்டர்களின் வாயிலாக தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் சில மாவட்டங்களில் தியேட்டர்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சத்யம் திரையரங்கில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் ஹோட்டல் ,தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள் ,விளையாட்டு மைதானம், சந்தை, வணிக வளாகங்கள், திரையரங்கம், கடைகள், நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகிய பொது இடங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் , கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாட்கள் நிறைவடையாதவர்கள், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் நிறைவடையாதவர்கள், 18 வயது பூர்த்தி அடையாதவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டாஸ்மாக், கோயில்களிலும் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும்தான் அனுமதி என்பதை விரைவில் கொண்டுவரப்படும் என்றும் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.