இனி தான் ஆட்டம் ஆரம்பம்..! செங்கோட்டையன் பின்னணியில் யார்? - முக்கிய தகவல்களை வெளியிடுகிறார் இ.பி.எஸ்..!

 
1 1

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன் வலியுறுத்தினார். இதனையடுத்து அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்ததோடு டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து அவரை நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார். 


இந்நிலையில், செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் அலைகடலெனத் திறண்டிருந்து, எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வுகள், அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

இந்நிலையில்,'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், 30.11.2025 - ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


வரும் 30ம் தேதி கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இ.பி.எஸ் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.மேலும் செங்கோட்டையன் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை 30ம் தேதி விரிவாக பேச இ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் பேசியதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களையும் வெளியிட இ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்த நிலையில், கோபிச்செட்டிபாளையத்தில் இ.பி.எஸ் பேச உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.