இது மட்டும் நடந்தா கட்சியை கலைச்சிடுறேன் - அண்ணாமலைக்கு சீமான் சவால்
பாஜகவை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாயு கசிவை ஏற்படுத்திய கோரமண்டல் நச்சு ஆலை குறித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கி இருக்கும் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு அந்த ஆலையை திறக்க உத்தரவிடக்கூடாது. நாம் தமிழர் கட்சி அந்த நச்சு ஆலையை திறக்க விடாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , தமிழர்களை திருடர்கள் போல பிரதமர் மோடி சித்தரித்து பேசுகிறார். இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு முன்பு அவர் பேசியிருக்க வேண்டியதுதானே? சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானம் நிறுத்தப்பட வேண்டும் . திமுகவுடைய கூட்டணி கட்சி தானே கம்யூனிஸ்ட். அவர்களுடன் பேசி கட்டுமானத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தென் மாநிலங்களில் பாஜக தவிர்க்க முடியாத கட்சியாக வரும் என அண்ணாமலை நம்புகிறாரே என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் , முதலில் தனித்து நிற்க பாஜகவுக்கு துணிவு இருக்கிறதா ? ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு தனித்து பாஜக பெற போகும் வாக்குகள் எவ்வளவு என தெரிந்துவிடும் . கூட்டணியாக இல்லாமல் தனித்த பாஜகவின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .


