விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? காவல்துறை மற்றும் மாநகராட்சி விளக்கம்..!
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல்துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு 2 நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்நிலையில், அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3,000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதனடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? காவல்துறை விளக்கம்
முல்லை நகர் சந்திப்பில் சிறிய தெருமுனை பிரசாரம் நடத்த மட்டுமே அனுமதி கேட்டதை தொடர்ந்து, எம்கேபி நகர் காவல் ஆய்வாளரின் பரிந்துரையை ஏற்று த.வெ.க.வின் மனு நிராகரிக்கப்பட்டது. வேறு ஒரு இடத்தில் அனுமதி கோரி மனு அளித்தால் பரிசீலனை செய்யப்படும் என,பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு - விஜய் குற்றச்சாட்டுக்கு மாநகராட்சி மறுப்பு
பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மாநகராட்சி பணிதான் காரணம் என்ற விஜய் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகராட்சி மாநகராட்சி சார்பில் எந்த சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. பணிகள் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

