என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைய ஓபிஎஸ்-க்கு அழைப்பா?? - நயினார் நாகேந்திரன் பதில்..
தேசிய ஜனநாயக கூட்டனியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்ப்பது குறித்து பின்னர் பேசலாம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
சென்னை தியகராய நகர் தாமஸ் ரோட்டில் பாஜக சார்பில் இன்று சேவை வாரம் கொண்டாடப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் என்றைக்குமே தூய்மை பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் திமுகவின் ஆட்சி இருக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த எதையும் இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுக தோல்வி பயத்தில் இருக்கிறது. 200 தொகுதிகளுக்கு மேல் தோற்கும்.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. பீகார் மாநிலத்தில் 60 லட்சம் வாக்காளர்கள் இல்லை என்று கூறினார்கள். 20 லட்சம் வாக்காளர்கள் இறந்து போனதாகவும் 30 லட்சம் வாக்காளர்கள் வெளியூரில் உள்ளார்கள். பங்களாதேஷின் உள்ளவர்களை மேற்கு வங்கத்திற்கு கொண்டு வந்து ஆட்சியைப் பிடித்தது போல் தமிழ்நாட்டிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை கூட்டி வந்து வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியா என்பது மிகப்பெரிய நாடு உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பீகாரை பற்றி எப்படி பேச முடியும். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தியா அளவில் எப்படி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச முடியும்.. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாட்டில் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களுக்கு தமிழக காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பாஜக கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படுமா” என்கிற கேள்விக்கு “ அதுபற்றி பின்னர் பேசலாம்” என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்தார்.


