300 பன்னாட்டு ஹாக்கி போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை - மதுரை எம்.பி., வாழ்த்து!!

 
gt

வந்தனா கட்டாரியா 300 பன்னாட்டு ஹாக்கிப் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் (2021) தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்தியப் பெண். காலிறுதி போட்டியில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெற வழி வகுத்த ஆட்டம் அது. ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியின் பொருட்டு, தந்தையின் இறுதி சடங்குக்கு செல்லாமல் விட்ட வந்தனாவுக்கு கிடைத்ததெல்லாம் சாதி துவேஷம். அவரைப் போன்ற தலித் பெண்கள் இடம் பெற்றதால்தான் தோல்வி என்று கொக்கரித்தது ஒரு கூட்டம். குடும்பத்தை விட நாடு முக்கியம் என்று நினைத்து பயிற்சியில் பங்கெடுத்த வந்தனா ஒரு பக்கம், தேசத்தை விட சாதி உயர்வானது என்று நினைத்து தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய கீழ்த்தரமான கூட்டம் இன்னொரு பக்கம். இதில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்? 

th

குற்றவாளிகளை கைது செய்ததோடு மட்டும் நிற்காமல், இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த உங்கள் பக்கம்தான் நிற்கிறோம் என்கிற வலிமையான செய்தியை நாட்டுக்குச் சொல்ல ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் சென்று பாராட்ட  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் வந்தனா கட்டாரியாவை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில் ரோஷ்னாபாத் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். “வாழ்த்துகள் வந்தனா! காலம் உங்கள் கைகளில்.” என்று அவருக்கும், அவரது அம்மா மற்றும் அவரது அண்ணன் மூவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். 



இன்று வந்தனா கட்டாரியா 300 பன்னாட்டு ஹாக்கிப் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியின் போது அவரது காலனியில் யாரோ ஆசிட்டை ஊற்றிவிட  அதன் பின் வெறும் காலில் விளையாடியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இன்று அவரது காலடிதான் இந்திய விளையாட்டின் புதிய தடத்தை உருவாக்கியுள்ளது. வாழ்த்துகள் வந்தனா என்று குறிப்பிட்டுள்ளார்.