தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு!

 
fire

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியபோது சேலையில் தீப்பற்றியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.  

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி. வடக்குத்தெருவை சேர்ந்தவர் வேதநாயகம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி அந்தோணியம்மாள் (52). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு  சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்தோணியம்மாளின் சேலையில் மெழுகுவர்த்தியில் இருந்து தீ பற்றியது. 

police

சிறிது நேரத்தில் மளமளவென உடல் முழுவதும் தீ பரவியதால் அந்தோணியம்மாள் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிச்சென்ற அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அந்தோணியம்மாளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று அந்தோணியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.