பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு- தேனியில் அதிர்ச்சி

 
ச் ச்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பஜார் பகுதியில் பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் வழக்கறிஞர் இவரது மனைவி அம்பிகா (வயது 43)கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவர் மாவட்ட நீதிமன்ற வழக்கு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று விட்டு கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள பஜார் பகுதியில் உள்ள அரசமரம் பூக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 55 வயதுடைய நபர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை வைத்து வெற்ற முயன்றார். அப்போது அம்பிகா தடுக்க முயன்ற போது அவரது இடது கண்ணிற்கு கீழ் குத்தினார். 

இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு சப் இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அம்பிகாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் முதியவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கூடலூர் சேர்ந்த குபேந்திரன் என்பதும், குபேந்திரனுக்கும், அம்பிகா குடும்பத்தினருக்கும் வீட்டு பாதை பிரச்சனை இருந்துள்ளது. இதனால் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிவாளால் வெட்டியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குபேந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் அறிந்த உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிகாவிடம் விசாரித்தார். பின்னர் டாக்டரிடம் விசாரித்தார் அப்போது அம்பிகாவின் கண்ணிற்கு செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்பிகாவை மேல் சிகிச்சைக்காக  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கம்பத்தில் பரபரப்பாக காணப்படும் அரசமரம் பகுதியில் பெண் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய சம்பவம் கம்பம்  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.