பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த தொழிலாளர்.. திருச்செந்தூரில் நேர்ந்த சோகம்..!!
பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து விஷ வாயுத்தாக்கி தூய்மை பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதக்கழிவுகளை மனிதர்களே சுத்தப்படுத்தும் அவலம் நிகழக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம், இயந்திரங்கள் என பல நவீன வசதிகள் இருப்பினும் ஆங்காங்கே கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுவபர்கள் , விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து விஷவாயு தாக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆனது அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது. இதனால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் கழிவுநீரை அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீரை வெளியேற்றும் பணியில் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் மணி ஈடுபட்டிருந்தார். கழிவுநீர் வாகனத்தின் குழாயை பாதாள சாக்கடைக்குள் செலுத்தும் போது, எதிர்பாராத விதமாக மணி சாக்கடைக்குள் தவறி விழுந்தார்.
அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட உடனிருந்தவர்கள் , உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷவாயு தாக்கிய மணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


