தமிழ்நாடு அரசின் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி!
தமிழ்நாடு அரசு ரூ.1,185 கோடியில் செயல்படுத்த உள்ள மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தை 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் 1,185 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்த உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் 5 ஆண்டுகளில் கீழ் 6 லட்சம் மகளிருக்கு திறன் பயிற்சி மற்றும் 18 ஆயிரம் மகளிருக்கு சுய தொழில் தொடங்குவதற்கான பல்வேறு பயிற்சிகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிதி ஆண்டில் 8 மாவட்டங்களில் 168 கோடியில் பல்வேறு திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அனைத்தும் அடங்கிய பல்துறை தகவல் தளம், உலகளாவிய பெண்கள் உச்சி மாநாடு, மண்டல அளவிலான உள்வளர் சூழல் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


