இபிஎஸ் தாக்கல் செய்த ரிட் மனு : 10 நாட்களுக்கு முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு..
அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி பழனிசாமி தாக்கல் வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிகரிக்கவில்லை. அதேபோல் எடப்பாடின் பழனிச்சாமியை பொதுச்செயலாளராகவும் தற்போது வரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில், சட்ட திருத்தங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டி இருக்கிறது. ஆகையால் அவசரம் கருதி இந்த வழக்க விசாரணையை விரைந்து நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கவில்லை. அதுமட்டுமின்றி அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தகவலை தெரிவித்தும், அதனையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் காலதாமதப்படுத்தி வருவதாக கூறினார். ஓபிஎஸ் மற்றும் புகழேந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மூல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், பழனிசாமியின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது வாதிடப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 நாட்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கக்கோரிய மனு மீது முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் , டெல்லி ஐகோர்ட் முடித்து வைத்தது.