அந்த அதிகாரம் உங்களுக்கு இல்ல.. ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..

 
h.raja h.raja

வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஹெச்.ராஜா, தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு  காவல்துறை அனுமதி வழங்கவில்லை.  இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. மேலும், ஆர்ப்பாட்டத்தில்  வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என்றும், முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்திருந்தது.  

Highcourt

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மத மோதலை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.  இதனையடுத்து அவரது பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹெச்.ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. 

இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீமன்றத்தில் ஹெச்.ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று  நீதிபதி வேல்முருகன்  விசாரணைக்கு வந்தது. அப்போது  வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.   மேலும் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.  நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.