புதைக்குழிக்குள் சிக்கிய சிறுவன்.. சாதூரியமாக மீட்ட இளைஞர்கள்.. குவியும் பாராட்டு..
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே புதைக்குழிக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை, சாதுரியமாக செயல்பட்டு போராடி மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ( என்.எல்.சி) சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட மணலை சுரங்கத்திற்கு அருகிலேயே கொட்டிவிடுகிறது. அப்படியிருக்க இரண்டாம் சுரங்கத்தின் அருகில் ஊமங்கலம் உட்பட பல கிராமங்கள் இருக்கின்றன. இந்தநிலையில் ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன், நேற்று அந்த மணல் மீது நடந்து சென்றுள்ளார். அப்போது மண் அதிக ஈரப்பதத்துடன் இருந்ததால், திடீரென மணல் உள்வாங்கியது. அதனால் சிறுவன் மெல்ல மெல்ல மணலுக்குள் புதையத்தொடங்கியுள்ளான். வெளியே வர முயன்றும் சிறுவனால் முடியவில்லை. இதனால் பயத்தில் சிறுவன் கூச்சலிட்டுள்ளான்.
அது அதிக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அங்கு யாரும் வரவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிறுவன் தனியாளாக கத்திக் கதறிக் சோர்வடைந்து போனான். அதற்குள்ளாக சிறுவனின் மார்பளவுக்கு உடல் மண்ணில் புதைந்தது. அதன்பிறகே எதிர்பாராத விதமாக சிறுவன் இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த, நெய்வேலி ரோமாபுரியை சார்ந்த இளைஞர்கள் நான்கு பேர் , சிறுவன் புதைக்குழிக்குள் சிக்கியிருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக சிறுவனை மீட்க 4 பேரும் மணலில் இறங்கினர். ஆனால் அவர்களின் கால்களும் மணலில் புதைய ஆரம்பித்தால், செய்வதறியாமல் திகைத்தனர்.
பின்னர் சிறுது நேரத்தில், அவர்களுக்கு புதிய யோசனை வந்திருக்கிறது. 4 இளைஞர்களில் ஒருவர் மணலில் படுத்தபடி மெல்ல உருண்டு சென்று சிறுவனை நெறுங்கினார். படுத்திருந்த நிலையிலேயே சிறுவனை கையை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுக்க, பின்னர் மற்றொரு இளைஞரும் அதேபோல் உருண்டு சென்று சிறுவனை மீச்க கை கொடுத்தார். சுமார் அரை மணி நேரம் போராட்டத்தின் பலனாக அவர்களை சிறுவன் பத்திரமாக மீட்டனர். பின்னர் சிறுவனை ஆசுவாசப்படுத்தி அவர்களே வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டுள்ளனர். இதனையடுத்து சிறுவனை பத்திரமாக ரோமாபுரி இளைஞர்கள் பிரவின் குமார், எட்வின் ராஜ், மிரோலின், ராகுல் ஆகிய 4 பேரையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.