இளைஞர் கவின் ஆணவக்கொலை : எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்..!
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் பட்டியலின இளைஞர் கவின். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த கவின், நெல்லையை சேர்ந்த உதவி ஆய்வாளர் தம்பதியான சரவணகுமார் - கிருஷ்ணவேணியின் மகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவின் மீது பெண்வீட்டார் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
இதனிடையே தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக கே.டி.சி. நகர் மருத்துவமனைக்கு சென்ற கவினை, அவரது காதலியின் சகோதரன் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பிறகு அடையாளம் தெரியாத நபர்களால் கவின் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கவின், காதலித்து வந்த பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று தானாக சரணடைந்தார். தனது சகோதரியை காதலிக்கும்படி டார்ச்சர் செய்து வந்ததால் கவினை கொன்றதாகவும் சுர்ஜித் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கில் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையாளர் சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்களான உதவி ஆய்வாளர் தம்பதியின் தூண்டுதலின் பேரிலேயே , தங்களது மகன் கொலை செய்யப்பட்டதாக கவினின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர்கள் தம்பதி மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சரணடைந்த சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேனி தம்பதி இருவருமே உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தூண்டுதல் பேரிலேயே சுர்ஜித் - கவினை கொலை செய்தது விசாராணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து எஸ்.ஐ., தம்பதிகள் மற்றும் சுர்ஜித் மீது கொலை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய உதவி ஆய்வாளர்கள் தம்பதியினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிஐஜி விஜயலட்சுமி இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.


