மாநகர பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி; தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்!

 
dead

சேலையூர் அருகே சென்னை மாநகரப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கண்முன்னே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி சுப்புராஜ் - ரமணி. இவர்களது மகன் ஸ்ரீதர். 21 வயதான ஸ்ரீதர் என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு மேற்கு படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை ரமணி தனது சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுவிட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை அழைத்து வருவதற்காக ஸ்ரீதரும் சுப்புராஜூம் தனித்தனியாக இரு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். 

accident

தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சேலையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீதரின் பைக் மீது மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த ஸ்ரீதர் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி கொண்டார். இதில் ஸ்ரீதரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மகனின் உடலை பார்த்து சுப்புராஜ் கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்க வைத்தது. தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார்,  பஸ் டிரைவர் ஜீவரத்தினத்தை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.