100வது நாளை எட்டிய போர்.. உக்ரைனின் 20% நிலப்பரப்பை ஆக்கிரமித்த ரஷ்யா..
உக்ரைனின் 20% நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது , ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த தாக்குதல் 100வது நாளை எட்டியிருக்கிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு இரையாகி உக்ரைன் நாடே உருகுலைந்து போய் கிடக்கிறது. தலைநகர் கீவ், மற்ற பெரிய நகரமான கார்க்கிவ் போன்ற நகரங்களின் பெரும் பகுதிகள் ரஷ்ய படைகள் வசம் சென்றுவிட்டன. குறிப்பாக மரியுபோல் நகரை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது ரஷ்யா.. இதுவரை உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பதில் தாக்குதலில் சுமார் 15,000 ரஷ்ய ராணுவத்தினரை கொன்று குவித்துவிட்டதாக உக்ரைன் அரசும் கூறி வருகிறது.
சில நாட்களுக்கு முன் மரியுபோல் நகரில் சாலைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும், பதுங்கு குழிகளிலும் குவிந்து கிடந்த சடலங்கள உலக நாடுகளையே உலுக்கியது. தற்போது கிழக்கு டோன்பாஸ் நகரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கி 100 நாட்களை எட்டியிருக்கும் நிலையில், உக்ரைனின் 20% பகுதிகள் ரஷ்யாவின் வசம் சென்றுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதலில் நாட்டு மக்களிடன் துப்பாக்கியை கொடுத்து போருக்கு அழைத்த உக்ரைன் அரசு , தற்போது ரஷ்ய ராணுவத்தின் மீது எதிர்த்தாக்குதல் நடத்த சிறை கைதிகளையும் களமிறக்கியுள்ளது. அத்துடன் உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்யா துவம்சம் செய்துவிட்டதாக இங்கிலாந்து ராணுவம் சொல்கிறது. அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா, ராணுவங்களை அனுப்பி வருவதாலும், நிதியுதவி அளித்து வருவதாலும் இந்த போர் இப்போதைக்கு ஓயாது என்றே கூறப்படுகிறது. .