அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி

 
war

உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 4 மாதங்களை கடந்தும்,  போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் கொடூர தாக்குதலால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தைக் கைப்பற்ற, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

war

இந்நிலையில், உக்ரைனின் ஒடேசா அருகே செர்ஹிவிக்கா பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. இதில், அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் பலியான நிலையில்,  30 பேர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் பாம்புத் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெற்றன. நல்லெண்ண அடிப்படையில் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், தன் எதிர்ப்பு காரணமாகவே ரஷ்யா பின்வாங்கியதாக உக்ரைன் கூறியுள்ளது.