பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்... 6 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாகாணத்திலுள்ள ஹர்னாய் மாவட்டமே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குவெட்டா, சிபி, பிஷின், முஸ்லிம் பாக், ஜாய்ரத், கிலா, அப்துல்லா, சஞ்சவி, ஜோப், சமான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப் பிரதேசம் என்பதால் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் குழந்தைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹர்னாய் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.