இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் பீதி

 
earth

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

இந்தோனேஷியா நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர். இதேபோல் கடந்த ஆண்டு மேற்கு சுலாவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் பலியான நிலையில், சுமார் 6,500 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர் 
 
மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 மற்றும் 5.5 என ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இரண்டு நிலநடுக்கங்களும் 15 கிலோமீட்டர்  ஆழத்தில் அபேபுரா நகரத்திலிருந்து 272 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால், அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.