கருக்கலைப்பு உரிமைச் சட்டம் ரத்து : அமெரிக்காவின் மோசமான நாள் என அதிபர் பைடன் கருத்து..
அமெரிக்காவில் 50 ஆண்டுகால கருக்கலைப்பு உரிமை சட்டத்தை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் ஒரு வழக்கில், கருகலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதேபோல் 1992 ஆம் ஆண்டில் மற்றொரு வழக்கில் 22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சடப்பூர்வமாக கருகலைப்பு செய்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கப்பட்ட 50 ஆண்டுகால உத்தரவை , அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை இயற்றியுள்ளன. மேலும் சில மாகாணங்கள் விரைவில் நிறைவேற்றும் புதிய உத்தரவை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவுக்கு மோசமான நாள் என அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு உரிமை சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் பெண்களின் அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் பறிப்பதாக குற்றம் சாட்டிய அவர், இதன்மூலம் அமெரிக்க உச்சநீதிமன்றம் வரலாற்று பிழையை இழைத்து விட்டதாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடுபவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனவும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேநேரம் கருக்கலைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்திருக்கிறது.