சீனாவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா - கட்டுப்பாடுகளை நீக்க கோரி மக்கள் போராட்டம்

 
protest

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது.  இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 40 ஆயிரத்திற்கு சற்று குறைவாக, 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 36,082 பேர் அறிகுறியற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் சுகாதார ஆணையம் வெளியிட்டது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளை விட அதிகமாகும். நேற்று முன் தினம் சீனாவில் 35,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

covid

தொடர்ந்து, 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி வரும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்து வருகிறது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.