உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 9 பில்லியன் யூரோ நிதியுதவி - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

 
EU

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரால், உருக்குலைந்த உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், உடனடியாக  9 பில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 3 மாதங்களை கடந்த நிலையில் போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல்  உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளையும் விதித்தன. இருந்த போதிலும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை. இதேபோல் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.  

russia

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரால், உருக்குலைந்த உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், உடனடியாக  9 பில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.. பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ்சில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உக்ரைனின் உடனடி பணப்புழக்க தேவைகளுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிச்செல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனின் இந்த உதவியால் உக்ரைனின் பொருளாதாரம் எழுச்சி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.