விடுதலை.. விடுதலை.. கொரோனாவிலிருந்து விடுதலை - அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து கொண்டே இருப்பதால் அடுத்தடுத்த அலைகள் உருவாகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் கொரோனா நோய் தொற்று முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் முழுமையான பலனை அளிக்கவில்லை.
இதனால் கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதற்கிடையே கொரோனா நெருக்கடியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதுமாக விடுதலை பெறும் நிலையில் உள்ளதாக அந்தப் பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் கிளக் (Hans Kluge) கூறியுள்ளார். இதுகுறித்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், "கொரோனாவுக்கு எதிரான போரில், ஐரோப்பிய நாடுகள் கிளைமேக்ஸை நெருங்கியுள்ளன.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது. மற்றொன்று பெரும்பாலோனோரை கொரோனா தாக்கியதால் இயற்கையாக உருவான கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி. இவையிரண்டின் காரணமாகவே ஐரோப்பிய நாடுகளில் ஏராளமானவர்களுக்கு கொரோனாவை எதிர்க்கும் ஆற்றம் கிடைத்துள்ளது. அதேபோல குளிர்ச்சியான தட்பவெப்பத்தில் கொரோனா பரவும் தன்மை, ஒமைக்ரானின் வீரியம் குறைவு ஆகியவையும் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர காரணமாக அமைந்துள்ளன.
இன்னும் சில வாரங்களில் ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அத்தகைய சூழலில் ஐரோப்பிய நாடுகளில் நன்மையான சூழல் நீண்ட காலத்துக்கு நிலவும். அந்த சமயத்தில் மீண்டும் கொரோனா தலையெடுப்பதைத் தடுக்கும் வகையில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கான நோய் எதிர்ப்பாற்றலை பெற்றிருப்பார்கள். ஒமைக்ரானை அடுத்து புதிய வகை கொரோனா ஐரோப்பாவில் பரவத் தொடங்கினாலும், அதனை அதிகாரிகள் எளிதில் சமாளித்துவிட முடியும்.
சுகாதார அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகள் மட்டுமன்றி, பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கும் நோய்த்தடுப்பு ஆற்றலும் புதிய வகை கொரோனாக்களை மிக எளிதாகவே முறியடிக்கும். அந்த வகையில், கொரோனாவிடமிருந்து ஐரோப்பா விடுதலை பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை. இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வருவோரால் கொரோனா மீண்டும் தீவிரமடையும் அபாயமும் உள்ளது. ஆகவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் எல்லை வரையறையின்றி அனைத்து நாடுகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.