இஞ்சி, மூலிகை தேநீர்- கொரோனாவை கட்டுப்படுத்த வடகொரிய அரசின் பரிந்துரை
கொரோனாவை எதிர்கொள்வதற்காக இஞ்சி, மூலிகை தேநீர் பருக வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறது வடகொரிய அரசு. வெளிநாட்டு மருத்துவ உதவிகளை ஏற்க மறுத்து வரும் வடகொரியா அதிபர், பாரம்பரிய மருந்துகளை பரிந்துரைத்து வருகிறார்.
வடகொரியாவின் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் அந் நாட்டில் 2. 19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால் அந்த நோயை போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மட்டுமே அதிகாரிகள் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாமல், மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் சில வடகொரியாவுக்கு உதவுவதாக சொன்னாலும் வெளிநாடுகளின் மருத்துவ உதவியை ஏற்க மறுத்து வருகிறார் வடகொரிய அதிபர்.
அதற்கு பதிலாக கொரோனாவை எதிர்கொள்ள பாரம்பரிய மருந்துகளை மட்டுமே அவர் பரிந்துரைத்து வருகிறார். கொரோனாவை எதிர்கொள்வதற்காக இஞ்சி, மூலிகை தேநீர் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள் பருக வேண்டும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் மூலமாக பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது.