இலங்கையை விட்டு வெளியேறினாரா கோத்தபய..?? மாலத்தீவுக்கு தப்பியோடியதாக தகவல்..
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.. ஆனால் அதன்பிறகும் அங்கு பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை.. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. 3 நாட்களுக்கு முன்பு அதிபர் மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் தப்பியோடினார். உயிருக்கு பயந்து தலைமறைவாகியிருக்கும் கோத்தபய எங்கிருக்கிறார் என்கிற விவரம் வெளியாகமல் இருந்தது.
மக்களின் கோபத்தால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினார். 4 அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், இலங்கையில் அரசு நிர்வாகம் தடுமாற்றம் கண்டுள்ளது. தப்பி ஓடிய அதிபர் கோத்தபய, இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா அறிவிப்பை வெளியிடுவார் என சபாநாயகர் அபேவர்தன தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடத்தப்பட்ட அவசர அனைத்து கட்சிக் கூட்டத்தில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அதிபர் பொறுப்புகளை இடைக்காலமாக கவனிக்கவும், விரைவில் அனைத்து கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, இன்று அதிபர் கோத்தபய பதவி விலகியதும் அனைத்துக் கட்சி ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே அதிபர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாகவும், முன்னதாக அவர் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலையில் அவர் மாலத்தீவு தலைநகரான மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.