புளோரிடாவை சூறையாடிய இயான் புயல்.. பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு..
புளோரிடாவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை அண்மையில் இயான் புயல் தாக்கியது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக் 'இயான்' கருதப்படுகிறது. புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே இயான் புயல், கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் புயல், 2வது முறையாக நேற்று முன்தினம் தெற்கு கரோலினா கடற்கரையில் கரையை கடந்தது. அதிதீவிரமாக தாக்கிய இந்த புயலால் பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.
அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை புயலில் சிக்கி 54 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார். இயான் புயலால் புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போயுள்ளது. புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு, சேதங்களை ஆய்வு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் புதன்கிழமை புளோரிடா செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.