ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் - வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா..

 
ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பாதுகாப்பு கவுன்சில் - வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா..

உக்ரைனின் 4 மாகாணங்களை கைப்பற்றியதற்கு எதிராக  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா  புறக்கணித்துள்ளது.  

உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.   உக்ரைனின் 4 மாகாணங்களை  ரஷ்யாவுடன் இணைக்கும் முடிவுக்கு  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல்  ரஷ்யாவின் இந்த செயல்  சட்டவிரோதமானது என்றும்  உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  இந்தச்சூழலில்    ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்,  அமெரிக்க ஆதரவுடன்  நேற்று  தீர்மானம் கொண்டு வரப்பட்டது.    

modi putin

உக்ரைன் எல்லையில்  ரஷ்யா கொண்டுவந்துள்ள எந்தவொரு மாற்றத்தையும்  உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது என்றும்,  உடனடியாக ரஷ்ய படைகளை வாபஸ் பெறவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கோரப்பட்டது.  இதனையடுத்து  தங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது என்று ரஷ்யா கேட்டுக்கொண்டது. அத்துடன் நிரந்தர உறுப்பினர்களுக்கு  கண்டனம் தெரிவிப்பது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் முன்னெப்போதும் இல்லாதது என்று கூறிய ரஷ்யா,   கண்டனத் தீர்மானத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தோடு,   வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தையும்  நிராகரித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்த நிலையில்,  இந்தியாவும், சீனாவும்  வாக்கெடுப்பில் இருந்து விலகின.  இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன.