உக்ரைனில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள்.. இந்தியா கடும் கண்டனம்..
உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தொடங்கிய நிலையில், 6 வாரங்களைக் கடந்தும் தாக்குதல் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே இருக்கிறது. ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதலால் உக்ரைன் நகரமே உருகுலைந்துபோயுள்ளது. உக்ரைனில் உள்ள பெரும்பாலான நகரங்களை கைப்பற்றிவிட்ட ரஷ்யா, அண்மையில் கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது. மீண்டும் புச்சா நகரை உக்ரைன் கைப்பற்றியுள்ள சூழலில் , அங்க அரங்கேறிய உச்ச கட்ட போரில் மக்கள் கொடூர தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளிலும் , குப்பைத் தொட்டிகளிலும் மனித உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. குப்பைத்தொட்டியில் 20 மனித உடல்களும் , தேவாலயம் ஒன்றின் அருகே உள்ள 45 அடி நீள புதைக்குழியில் மட்டும் 280 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புச்சா நகரில் மட்டும் 410 பேர் கொன்று புதைக்கபட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யா படுகொலை செய்ததாக உக்ரைனும், உக்ரைன் படைகளே கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக ரஷ்யாவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்தியா சார்பில் ஊரை நிகழ்த்திய டி.எஸ்.திருமூர்த்தி , உக்ரைனில் பாதுகாப்பு நிலைமையும், மனிதாபிமானமும் மோசமடைந்துவிட்டதாக கூறினார். புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து சமீபத்திய அறிக்கைகள் மிகுந்த கவலையளிப்பதாகவும், இந்த சம்பவத்தை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உக்ரைனுக்கு இந்தியா மருந்து பொருக்களை அனுப்பி வருவதாகவும், தேவைபடும் பட்சத்தில் மேலும் மருந்து பொருட்களை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்தியா தெரிவித்திருக்கிறது.